Tuesday, February 19, 2013

LTTE தலைவரின் மகன் படுகொலை செய்யப்பட்டது எப்படி? நெஞ்சை நெருடும் ஆதாரங்கள்!


















தலைவரின் மகன்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் சிறீலங்காவின் இனஅழிப்பு படைகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்களை பிரித்தானியாவின் பிரபல நாளேடான The independent வெளியிட்டுள்ளது.
இறுதியாக கிடைத்த ஆதாரங்களின் படி பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.
'சுடப்பட்ட துப்பாக்கியின் குழல் வாய், பாலச்சந்திரன் நெஞ்சுக்கு மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே இருந்துள்ளது. முதலாவது ரவை சுடப்பட்ட பின்னர், பின்புறமாக சாய்ந்து விழுந்த சிறுவன் மீது நான்கு தடவைகள் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் கண்களோ, கைகளோ கட்டப்பட்டிருந்த நிலையில் சுடப்பட்டதற்கான தடயங்கள் இல்லை.
ஆனால், அவரது மெய்க்காவலர்கள் கண் முன்பாகவே இந்தப் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்' என்று தடயவியல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிறீலங்கா அரசாங்கமானது பாலச்சந்திரன் போரில் கொல்லப்படவில்லையென்றும், தாம் நடாத்தியது மனிதாபிமானப் போரென்றும் கூறிவருகின்ற நிலையில் வெளியாகியுள்ள இந்த நெஞ்சை நெருடும் ஆதாரம் பெரும் அழுத்தங்களை சிறீலங்கா ஆட்சியீடத்துக்கு உண்டுபண்ணும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரும், கொமன்வெல்த் தலைவர்கள் மாநாடும் வெளிவந்துள்ள ஆதாரங்களால் சிறீலங்காவுக்கு அழுத்தத்தை வழங்குவதற்கு வழிகோலும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment