Tuesday, March 26, 2013

சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடமாட்டார்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு


banner-1-6708டெல்லி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் 
என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருக்கிற சூழ்நிலையில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் இடம்பெறாத போட்டிகளை மட்டுமே சென்னையில் நடத்த அனுமதிக்க முடியும் என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியது நினைவிருக்கலாம்.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல். நிர்வாகிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் கடிதம்…
இது தொடர்பாக ஐ.பி.எல். தலைவரும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க அமைச்சருமான ராஜீவ் சுக்லா விடுத்துள்ள அறிக்கை:
சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் பங்கேற்பதை நான் அனுமதிக்க முடியாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக ஐ.பி.எல். நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூடியது.
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கிற வீரர்கள், போட்டிகளை காண வருகிற பார்வையாளர்கள், மைதானங்களில் பணியாற்றுகிறவர்கள் என அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் தருகிறது. எனவே இரண்டு அம்சங்களை நாங்கள் கவனத்தில் கொண்டோம். உள்ளூர் உணர்வுகள், இலங்கை வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு கவனத்தில் கொண்டது.
இலங்கை வீரர்கள் பங்கேற்பு இல்லை
உள்ளூர் நிர்வாகம் ஒன்றைக் கூறுகிறபோது, நாங்கள் அதற்கு செவி சாய்த்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில், இந்தப் போட்டியை நடத்துவதில் குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாநில அரசு அதிகாரிகளின் உதவி எங்களுக்கு தேவையாக இருக்கிறது.
உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.எனவே சென்னையில் நடைபெறுகிற பெப்சி ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி 9 ஐ.பி.எல். அணிகளுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய தடகளப் போட்டிகளைத் தொடர்ந்து…
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால், 20 வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த முடியாது. வேறு எங்காவது நடத்திக் கொள்ளுங்கள் என முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தது நினைவிருக்கலாம்.
இலங்கை வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 13 இலங்கை வீரர்கள் உள்ளனர். தில்ஷான், சங்கக்கரா, மலிங்கா, ஜெயவர்தன, ஏஞ்சலோ மாத்யூஸ், குலசேகர, அகிலா தனஞ்செயா, ஜீவன் மென்டிஸ், சசித்ர சனநாயக, அஜந்தா மென்டிஸ், குசால் பெரேரா, முத்தையா முரளிதரன், திசரா பெரேரா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்கள் 8 ஐபிஎல் அணிகளில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குலசேகரா மற்றும் தனஞ்செயா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்போது அவர்களை நீக்கிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஹைதராபாத் அணியிலிருந்து திசரா பெரேரா மற்றும் சங்கக்கரா இன்னும் நீக்கப்படவில்லை.

No comments:

Post a Comment